திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்குச் சொந்தமான வீட்டில் முத்து என்பவர் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், முத்து மற்றும் அவரது நண்பர், கஞ்சா போதையில் செல்போனில் தகாத வார்த்தைகளில் சத்தமாக பேசியுள்ளனர்.
இதை பார்த்த சந்திரலேகா (38) என்ற பெண் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்து அவரது நண்பர்கள் இருவர் தங்களது அறையில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து வந்து சந்திரலேகாவை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் பட்டாக்கத்தியால் வெட்டியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமுல்லைவாயில் போலீசார் தலைமறைவாக இருந்த இருவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பொதுமக்களை தாக்கியது திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பதும் தெரியவந்தது.
அபினேஷூம் விஷ்ணுவும் இருவரும் சமீபத்தில்தான் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது. தப்பியோடிய முத்து என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.