இந்தியா
பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்! தப்பிக்க முடியுமா?
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பியும், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் பேரனுமானவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவரது ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தது.
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த பிரஜ்வல், இது மார்பிங் செய்யப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனால், இந்த வீடியோவின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கும் வகையில், பிரஜ்வலின் வீட்டில் பணிபுரிந்த பெண், அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.
அதில், பிரஜ்வல் ரேவண்ணா அவருடைய வீட்டில் பணிபுரியும் பெண்களிடம், ஆபாசமாக நடந்துக் கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு அணியை கர்நாடக அரசு உருவாக்கியிருந்தது.
மேலும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, பிரஜ்வல் ரேவண்ணாவிற்கும், அவரது தந்தைக்கும், நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நோட்டீஸை பெற்ற அவர், தான் இப்போது பெங்களூரில் இருப்பதாகவும், 7 நாட்களுக்கு பிறகு, விசாரணைக்கு ஆஜராவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், பிரஜ்வல் ரேவண்ணா கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அன்று, ஜெர்மணி நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக, தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு அணி, உலகம் முழுவதும் உள்ள immigration point-களுக்கு, லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
லுக் அவுட் நோட்டீஸ் என்றால் என்ன?
பெரும் குற்றங்களை செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பித்துவிடலாம் என்று சில குற்றவாளிகள் நினைப்பதுன்டு. அத்தகைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக தான் லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்படும்.
இந்த நோட்டீஸ், உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நோட்டீஸில், குற்றவாளியின் புகைப்படம், பாஸ்போர்ட் சம்பந்தமான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
இது சம்பந்தமான நபர்கள், விமானங்கள், கப்பல்களில் பயணம் செய்தால், அதிகாரிகள் அந்த நபர்களை கைது செய்து, லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள்.