திருப்பூர் வெள்ளியங்காடு பட்டுக்கோட்டையார் நகர் பகுதியை சேர்ந்த தங்கபாலு. இவர் தனக்கு சொந்தமான கடையை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா பிறந்த நாளையொட்டி இவரது கடை ஷட்டரில் சசிகலா பிறந்தநாள் வாழ்த்து குறித்த போஸ்டர் ஒட்டியுள்ளார். இதனை இந்து முன்னணியினர் கிழித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்து முன்னணியை சார்ந்தவர்களுக்கும் தங்கபாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இந்து முன்னணியை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட நபர்கள் தங்கபாலுவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. மேலும் தங்கபாலுவை கூரிய ஆயுதங்களாலும் கிரிக்கெட் மட்டை ஆகியவை கொணடு தாக்கி படுகாயம் ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த தங்க பாலு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகாயம் அடைந்த தங்கபாலுவிற்கு ஆதரவாக தேவர் அமைப்பைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும். தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.