Connect with us

Raj News Tamil

வெயில் காலத்தில் கிட்னியை பாதுகாப்பது எப்படி? எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும்?

ஆரோக்கியம்

வெயில் காலத்தில் கிட்னியை பாதுகாப்பது எப்படி? எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும்?

வெயில் காலத்தில், அதிகப்படியான வியர்வை வெளியாகி, நம் உடலில் உள்ள நீர்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. இதனை சரி செய்வதற்கு நாம் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் குடிக்க தவறினால், சிறுநீரக கல், சிறுநீர் தொற்று ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, வெயில் காலத்தில், இந்த பிரச்சனையை எப்படி சரி செய்ய வேண்டும் என்று, மருத்துவர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போவாய் பகுதியில், டாக்டர் எல்.எச்.ஹீராநந்தனி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில், சிறுநீரக மருத்துவ நிபுணராக பணியாற்றி வருபவர் பிரகாஷ் சந்திரா ஷெட்டி. இவர், India.com என்ற இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “குறைவான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது, உங்கள் ரத்தத்தில் கழிவுப் பொருட்களை தேங்குவதற்கு வழிவகுக்கும். இதனால், உங்கள் சிறுநீரகம் இன்னும் கடுமையாக வேலை செய்ய துவங்கும். இறுதியில், சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

எத்தனை டம்ளர் தண்ணீர் நாம் கட்டாயம் குடிக்க வேண்டும்?

டாக்டர் ஷெட்டியின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். 2 லிட்டர் தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டும். ஆனால், இந்த வெயில் காலங்களில், அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும். இதனை சரிக்கட்டுவதற்கு, நீர் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பழச்சாறு, இளநீர், லெமன் ஜூஸ் போன்ற நீர் ஆகாரங்களையும், அல்லது தண்ணீரையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீரேற்றத்துடன் இருப்பதற்கான 4 டிப்ஸ்கள்:-

நீரை பருகுங்கள்:-

    தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி குடிக்கும் பழக்கத்தை, ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதும், வாட்டர் பாட்டிலை கையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பதையே மறக்கும் நபராக நீங்கள் இருந்தால், ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக, உங்களது ஸ்மார்ட் போனில், அலாரம் செட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பதை நினைவுப்படுத்துவதற்கு, சில செயலிகளும் வந்துவிட்டன. அதனை உங்களது செல்போனில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

    சிறுநீரின் நிறத்தை கவனியுங்கள்:-

      உங்கள் உடலின் நீரேற்றத்தை தன்மையை அறிவதற்கு, உங்களது சிறுநீரின் நிறத்தை கவனியுங்கள். அது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், உங்கள் உடல் நீரேற்றத்துடன் உள்ளது. ஆனால், அது அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீங்கள் அதிகப்படியான நீரை பருக வேண்டும்.

      தண்ணீர் குடிக்க முடியலையா?

        வெறும் தண்ணீரை அதிகப்படியாக குடிப்பது சில நேரங்களில் அலுத்துப் போகலாம். இதனால், சில பழங்கள், மூலிகைகள், காய்கறிகள் ஆகியவற்றை, தண்ணீரின் உள்ளே போட்டு குடிக்கும்போது, சுவையில் மாற்றம் இருக்கும் அலுத்துப் போகாது. குறிப்பாக, வெள்ளரிக்காய், எலுமிச்சைப் பழம், புதினா இலைகள் ஆகியவற்றை நீரில் சேர்த்து பருகும்போது, அது வெறும் தண்ணீரிக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

        நீரேற்றம் மிகுந்த உணவுகள்:-

          உங்களது தாகத்தை தணிப்பதற்கு, நீர் தான் சிறந்த ஒன்று. ஆனால், ஒருசில காய்கறிகள் மற்றும் பழங்கள், உங்களது நீரேற்றத்திற்கு உதவி புரியும். தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்கள், நாம் இழந்த நீர்சத்தை மீண்டும் உடலில் நிரப்புதவற்கு உதவும்.

          More in ஆரோக்கியம்

          To Top