இந்தியா
மக்களவையில் நுழைந்து எம்.பி.க்கள் மீது மர்மப் பொருளை வீசிய இருவர்..!!
கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 9 பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மக்களவையில் இன்று அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்தனர்.
அவர்கள் கைகளில் புகைகள் கக்கும் கருவியை வைத்திருந்ததாகவும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக, அந்த இருவரும் பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மற்றும் ஒரு அசம்பாவிதம் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.