தமிழகம்
காதலனுடன் பைக்கில் சென்ற மனைவி.. பிடித்து இழுத்த கணவன்.. கீழே விழுந்து உயிரிழந்த இளம்பெண்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள படப்பை பகுதியை சேர்ந்தவர் சிவா. இவருக்கு பூமாதேவி என்ற மனைவியும், லோகேஷ்வரி, சதீஷ் ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், பூமாதேவிக்கும், ஒரத்தூரை சேர்ந்த சுந்தர் என்பவருக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த சிவா, தனது மனைவியை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இருப்பினும், காதலை கைவிடாத நிலையில், தம்பதியினர் இருவரும் பிரிந்து, தனித்தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, பூமாதேவியும், அவரது கள்ளக்காதலன் சுந்தரும், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஜோடியாக செல்வதை பார்த்து ஆத்திரம் அடைந்த சிவா, அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பூமாதேவியை, அவரது கணவர் பிடித்து இழுத்துள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதையடுத்து, கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், சிவா தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். பின்னர், மருத்துவமனை சார்பில் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், சிவாவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login