தமிழகம்
பாஜக நிர்வாகி என்பதால் கைது செய்யப்பட்டேன் – நடிகை ரஞ்சனா நாச்சியார் பேட்டி
சென்னை : போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை பாஜக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என நாச்சியார் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.
இதையடுத்து ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அவர் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் மாங்காடு காவல் நிலையத்தில் 40 நாட்கள் கையெழுத்து இடவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது : நான் கைது செய்யப்பட்டதற்கு நடிகர் சங்கம் எனக்காக குரல் கொடுக்கவில்லை. சக நடிகர்கள் யாரும் துணை நிற்கவில்லை. நான் பாஜக நிர்வாகி என்பதால் கைது செய்யப்பட்டேன் என்றும் மாணவர்களை தாக்கியதற்கு வருத்தப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.