இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள்: இன்று முதல் ஒருநாள் போட்டி!

இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டம் பார்படாஸில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என வென்றது.இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளன. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் பார்படாஸில் இன்று இரவு நடைபெறுகிறது.

டி20-யைப் போல அல்லாமல், ஒரு நாள் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சூா்யகுமார் யாதவுக்கு தற்போது ஷ்ரேயஸ் ஐயருக்குரிய 4-ஆவது இடம் கிடைப்பதால் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்.

காயத்தால் களம் காணாத கே.எல்.ராகுலுக்கான இடத்தைப் பிடிக்க, சஞ்சு சாம்சன், இஷான் கிஷண் இடையே போட்டி உள்ளது. ஒருவேளை இஷான் தோ்வானால், 4-ஆவது இடத்துக்காக சூா்யகுமார், சாம்சன் இடையே போட்டி ஏற்படும். அணியின் இன்னிங்ஸை ரோஹித் – ஷுப்மன் கில் தொடங்குவார்கள் எனத் தெரிகிறது.

அடுத்து டி20 தொடா் இருப்பதால், அதற்கான கேப்டன் ஹா்திக் பாண்டியாவுக்கு தற்போது ஓய்வளிக்கப்படலாம். பௌலிங் பிரிவில் உம்ரான் மாலிக் மீண்டும் முத்திரை பதிக்க முயிற்சிக்கும் நிலையில், முகமது சிராஜ், ஜெயதேவ் உனத்கட், முகேஷ் குமார், ஷா்துல் தாக்குா் வேகப்பந்து வீச்சுக்காக உள்ளனா். ஸ்பின் பௌலிங்கிற்கு குல்தீப் யாதவும் இருக்க, யுஜவேந்தி சஹல் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்குரிய பரிசோதனைக் களமாக இந்தத் தொடரை இந்திய அணி நிர்வாகம் கையாளும் என்பதில் சந்தேகம் இல்லை. டெஸ்ட் தொடரைப் போலவே இதிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டநேரம்: இரவு 7 மணி

நேரலை: டிடி ஸ்போர்ட்ஸ், ஃபேன் கோட், ஜியோ சினிமா

RELATED ARTICLES

Recent News