இந்தியா
புனே கார் விபத்து.. 17 வயது சிறுவன் ரத்த மாதிரிகளில் குளறுபடி.. இரண்டு மருத்துவர்கள் கைது..
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த 19-ஆம் தேதி அன்று, மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு, தனது நண்பர்களுடன் சேர்ந்த மதுபானம் அருந்திய அவர், விலையுயர்ந்த காரை இயக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, வண்டியை தாறுமாறாக ஓட்டி, சாலையில் சென்ற இரண்டு பேர் மீது கடுமையாக மோதியுள்ளார். இந்த விபத்தில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த சிறுவனை கைது செய்து, குழந்தைகள் நல காப்பகத்தில் வைத்துள்ளனர். இதற்கிடையே, இந்த விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று, சிறுவனின் தாத்தா அகர்வால், வண்டியின் ஓட்டுநரை வற்புறுத்தியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறையில் மீண்டும் புகார் அளித்தார். அதன்பேரில், இன்னொரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறையினர், அகர்வாலை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்னொரு திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, சிறுவன் மது அருந்தியுள்ளானா? இல்லையா? என்பதை அறிய, அவனது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்வதற்காக, ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த ரத்த மாதிரிகளில், அவர் மது அருந்தவில்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.
ஆனால், சிறுவன் சென்ற மதுபான விடுதியில், அவர் மது அருந்தியதற்கான சிசிடிவி காட்சிகள் இடம்பெற்றுள்ன. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ரத்த மாதிரிகளில், மருத்துவர்கள் குளறுபடி செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சசூன் மருத்துவமனையின் மருத்துவர் அஜய் தவாடே மற்றும் ஹரி ஹர்னர் ஆகிய இரண்டு பேரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த இரண்டு மருத்துவர்களின் செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் இரண்டு பேரும், சிறுவனின் தந்தையிடம் செல்போனில் பேசியிருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இதில், அஜய் தவாடே என்ற மருத்துவர், தடயவியல் ஆய்வகத்தின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)