இந்தியா
ஹரியானாவில் இணைய சேவை முடக்கம்! தொடரும் போராட்டம் !
ஹரியானாவின் நூ மாவட்டத்தில் கடந்த 31-ம் தேதி நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தில், சிலர் கல்வீசித் தாக்கியதால் திடீர் கலவரம் மூண்டது. இதனை அடுத்து இரு தரப்பினர் இடையே தாக்குதல் நடந்ததில் 2 போலீஸார் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 8 காவல்துறை வாகனங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கல்வீசியும், தீ வைத்தும் சேதம் செய்யப்பட்டன.
வன்முறை தொடர்பாக வதந்திகள் பரவுவதைத் தடுக்க இணைய சேவையை மாநில அரசு முடக்கியது. இணைய சேவை முடக்கம் ஆகஸ்ட் 8 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் நகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டு வருகின்றன.
கலவரம் மீண்டும் வெடிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சந்தேகத்துக்கு உரியவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹரியானாவில் கலவர அபாயம் மேலும் பரவாதிருக்க, அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பித்தக்கது.