தமிழகம்
இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..! வைரலாகும் ஓட்டுநரின் வீடியோ..!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து அய்யங்கொள்ளி பகுதிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை அய்யங்கொள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு இருந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. ஆனால், அங்கு பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கிட்டத்தட்ட 4 மணி நேரமாக பேருந்துக்காக காத்திருந்துள்ளார். பேருந்து வந்தும் கை காட்டி நிறுத்தியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்தப்பேருந்து, அடுத்த நிறுத்தமான அய்யங்கொள்ளியில் நின்றுள்ளது.இதற்கிடையே ஜீப்பில் ஏறி பேருந்தை மடக்கிப்பிடித்த அப்பெண், ’கைக்குழந்தையோடு 4 மணி நேரமாக காத்திருக்கிறேன். கையைக்காட்டியும் வண்டியை ஏன் நிறுத்தவில்லை?’ என்று பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு கோபமாக பதிலளித்த ஓட்டுநர், நீங்க கையை எல்லாம் காட்டவில்லை என கூறியதோடு இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா? என கடுமையாக வசைபாடியுள்ளார். இதனை அங்கிருந்தவர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.