புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான், நிதியுதவி வழங்குவேன் என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது, தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர்.
குறிப்பாக, திமுகவை சேர்ந்தவர்கள், பல்வேறு மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில், இந்தி சொற்களை மையால் அழித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன்.
அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் திமுகவினர் நடத்தும் CBSE அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா திரு.ஸ்டாலின்?
உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.
மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே” என்று கூறியுள்ளார்.