சினிமா
பாடல் திருட்டு விவகாரம்.. பிரித்விராஜ் மீதான வழக்கு.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி, பெரும் வெற்றியை பதிவு செய்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு, ரிஷப் ஷெட்டியை பாராட்டித் தள்ளினர்.
இவ்வாறு பல பாராட்டுகளை பெற்ற இந்த திரைப்படம், சில சர்ச்சைகளையும் சந்தித்தது. அதாவது, இந்த படத்தில் இடம்பெற்றிருந்த வராகரூபம் என்ற பாடல், தாய்குடம் பிரிட்ஜ் என்ற மியுசிக் பேண்ட் மூலம் உருவாக்கப்பட்டது என்றும், அதனை எந்தவித அனுமதியும் இன்றி, காந்தாரா படக்குழுவினர் பயன்படுத்தினர் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன்காரணமாக, இந்த படத்தை கேரளாவில் விநியோகித்த மலையாள நடிகர் பிரித்விராஜ் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜரான பிரித்விராஜ் தரப்பு, தான் இந்த படத்தின் கேரள உரிமையை விநியோகம் மட்டுமே செய்தேன்.. இந்த படம் ஆக்கத்தின் எந்தவொரு நிலையிலும், நான் சம்பந்தப்படவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் இருந்து பிரித்விராஜ் சுகுமாரை விடுவித்து, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
You must be logged in to post a comment Login