தமிழகம்
மயிலை கபாலீஸ்வரர் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
மயிலையே கயிலை என்று பக்தர்களால் போற்றப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் கபாலீ.. நமச்சிவாய.. என்று பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 18ஆம் தேதி அதிகாலை 6மணி அதிகாரநந்தி தரிசனம், எம்பிரான் திருஞான சம்பந்தர் பெருமான் ஞானப்பால் அருந்தும் ஐதீக விழா நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 22-ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்குகிறது. மார்ச் 23ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவர் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி அளிக்கிறார்.
மேலும் மயிலாப்பூரில் திருவிழா தொடங்கியுள்ளதையடுத்து இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா முடியும் வரை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்களுக்கு அனுமதி இல்லை.