சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் கழிவுநீர் நடைமேடையில் வழிந்து வெளியே வருவதால் நோய் தொற்றும் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திறந்த வைத்ததிலிருந்து பேருந்து நிலையத்தில் பல்வேறு பிரச்சனைகளும் சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
பேருந்து நிலையத்தில் முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வகையான பேருந்துகளும் 99 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக விழா காலங்களிலும் மற்றும் வார இறுதி நாட்களிலும் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் அதிக அளவில் வருகை புரிவார்கள் இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனைய நடைமேடையில் குறிப்பாக ஒன்று மற்றும் இரண்டு மூன்று ஆகிய நடைமேடைகளில் உள்ள கழிவுநீர் நிரம்பி நடைமேடையில் வெளியே ஆறாய் ஓடுகிறது.
முறையான பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் வெளியே ஓடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் அந்தப் பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசப்படுவதால் மக்கள் தங்களது முகத்தை மூடிக்கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் கழிவு நீர் ஓடுவதை சரி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.