ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் எல்ஐசி முகவர் தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் உடலில் மின்சாரம் பாய்ச்சி எல்ஐசி முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பழைய கேஸ் ஆபீஸ் பகுதியை சேர்ந்த கந்தசாமி எல்ஐசி முகவர். இவரது மனைவி மகாலட்சுமி தாரமங்கலம் பிடிஓ ஆபீசில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கந்தசாமி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி வந்தார்.

இந்த விளையாட்டால் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். இதையடுத்து கந்தசாமி தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்தார். அவர்கள் கடனை அடைக்க தனது பூர்வீக நிலத்தை விற்று அடைத்துள்ளார். இருப்பினும் கடனை முழுவதுமாக அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் கந்தசாமியிடம் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் மனவேதனை அடைந்த கந்தசாமி வீட்டில் ஒரு அறைக்கு சென்று மின்சார கம்பியை உடலில் சுற்றிக் கொண்டு, மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.

வெகுநேரம் ஆகியும் அறையில் இருந்து கந்தசாமி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜன்னல் வழியாக பார்த்தபோது கந்தசாமி உயிரிழந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தாரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்த எல்ஐசி முகவர் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News