இந்தியா
உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த தமிழர்கள் – சந்திராயன் கடந்து வந்த பாதை
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சந்திரயான்-1
இந்தியாவின் சந்திரயான் விண்கலம். கடந்த 2008ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் மொத்தம் 11 ஆய்வு உபகரணங்கள் இருந்தன. அவற்றில் 5 கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். மீதம் உள்ள 6 கருவிகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டதாகும். இப்பணித்திட்டத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.
சந்திரயான்-2
சந்திரயான்-2 நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும். இந்த விண்கலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, ஜூலை 22 அன்று நிலாவை நோக்கி அனுப்பப்பட்டது. இப்பணித்திட்டத்தின் தலைவராக வனிதா முத்தையா இருந்தார். இவர் தமிழ்நாட்டின், சென்னையைச் சேர்ந்தவர். இவர் முதலில் வடிவமைப்பு பொறியாளராகப் பயிற்சி பெற்றார். இவர் கிண்டியின் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.
சந்திரயான்-3
சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 9- ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த இவர் 2004- ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். சந்திரயான் 2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கியப் பங்காற்றினார்.
மங்கள்யான்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா அருணன் மங்கள்யான்’ திட்டத்தின் தூணாக இருந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட “மங்கள்யான்’ செயற்கைகோள் 2014 செப்டம்பர் 24 அன்று வெற்றிகரமாக செவ்வாய் கோளை சென்றடைந்தது.
ஏற்கெனவே சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய திட்டங்களிலும் தமிழர்களே திட்ட இயக்குநராக இருந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சந்திரயான்-3 திட்டத்திலும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இடம்பெற்றது தமிழர்களிடையே பெருமையை சேரத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பது கூடுதல் பெருமை.