கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கௌதாளம் கிராமத்தில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கௌதாளம் அருகே பச்சனப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரப்பாவின் மகன் நரசிம்ம மூர்த்தி (22). அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் யுவஸ்ரீ (17) பிஎஸ்சி முதலாம் ஆண்டு கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் வீட்டார் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் விரக்தியில் இருந்த இருவரும் இன்று காலை நரசிம்மமூர்த்தி வீட்டில் வேஷ்டி துணியில் நரசிம்மமூர்த்தியும் துப்பட்டாவில் யுவஸ்ரீயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதனை தனது வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த மாரப்பா அதிர்ச்சி அடைந்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் யுவஸ்ரீ(17) காணாமல் போய் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், நரசிம்மமூர்த்தி போக்சோ வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைதாகி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.