தமிழகம்
பூந்தமல்லி சிறைச்சாலை மேல் டிரோன் பறக்க விட்ட நபர் கைது..!
ஆவடி அடுத்த பூந்தமல்லி கரையான் சாவடியில், தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் மற்றும் தனி கிளை சிறை உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு என்.ஐ.ஏ. வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களும், இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கில் தொடர்புடையவர்களும் இந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் டெல்லியில் உள்ள சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது இங்குள்ள நீதிமன்றம் மற்றும் தனி கிளைச் சிறை மீது சிறிது நேரம் டிரோன் பறந்து கொண்டு இருந்தது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த டிரோனை துப்பாக்கியால் சுட முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த டிரோன் அங்கிருந்து சென்று விட்டது.
இதனை கண்காணித்து பின் தொடர்ந்து சென்றபோது போலீசார் அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அந்த டிரோன் இறங்கியது. பின்னர் போலீசார் அந்த நபரை கைது செய்து டிரோனையும் பறிமுதல் செய்து பூந்தமல்லி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் விஜய் பாலாஜி(37), என்பதும் தனி கிளை சிறை அருகே இருந்த திருமண மண்டபத்தில் நடந்த திருமணம் நிகழ்ச்சிக்காக வீடியோ பதிவு செய்ய டிரோன் பறக்கவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து டிரோனை பறிமுதல் செய்தனர்.
நீதிமன்றம் மற்றும் தனி கிளைச் சிறை இருப்பது தெரியாமல் ட்ரோன் பறக்க விட்டது தெரியவந்த நிலையில் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அந்த நபர் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பூந்தமல்லி தனி கிளை சிறை மற்றும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தின் மேல் டிரோன் பறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
You must be logged in to post a comment Login