சுங்க கட்டணத்தை செலுத்த மறுத்து ஊழியர்களை தாக்கிய நபர்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

சுங்கச்சாவடியில் பாஸ் டாக் காலாவதி ஆன நிலையில் சுங்கு கட்டணத்தை செலுத்த மறுத்து அங்கிருந்த ஊழியர்களை தாக்கிய நபர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியில் டிடிபிஎல் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியில் நேற்று (19ம் தேதி மாலை சென்னையில் இருந்து திருச்சி நோக்கி திமுக கொடி கட்டி வந்த சொகுசு கார் ஒன்று சுங்கச்சாவடியில் பாஸ் டாக் மூலம் கட்டணம் செலுத்த முயன்ற போது அது காலாவதியாகியது என்று தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, ரொக்கமாக சுங்க கட்டணத்தை செலுத்துமாறு அதன் ஊழியர்கள் அந்த காரை ஓட்டி வந்தவரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அவர் பணம் கட்ட முடியாது, நான் வழக்கறிஞர், திமுக கவுன்சிலர் என்று கூறி, என்னிடமே பணம் கேட்கிறீர்களா என்று கூறி திட்டியவாறே வேக வேகமாக காரை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அங்குள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு அந்த கார் செல்லும் போது, சுங்க சாவடி ஊழியர்கள் அதனை தடுத்துள்ளனர். இதனால் மேலும் கோபமடைந்த அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்து, சுங்க சாவடி ஊழியர்களை திடீரென கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காரில் இருந்த சிலரும் இறங்கி வந்து சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

இதில் சுங்கச்சாவடி சூப்பர்வைசர் மணிகண்டன், சுங்க கட்டணம் வசூலிப்பாளர் பாண்டியன் ஆகியோர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த காரில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டதால், அதை ஓட்டி வந்தவர் யார், கார் யாருக்கு சொந்தமானது அவர்களது விலாசம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு ஊழியர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News