ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் தபேஷ் குமார் பட்டாசார்யா (55). இவர் 1992இல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி மற்றும் மகள்களை விட்டு தலைமறைவானார்.
இதையடுத்து கர்நாடகா மாநிலம் பெங்களுருவுக்கு சென்ற இவர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரையும் ஏமாற்றியுள்ளார். மேட்டரிமோனி இணையதளம் மூலம் விவகரத்து ஆன பெண்கள், கணவரை இழந்த பெண்களை குறிவைத்து தனது வலையில் சிக்க வைத்துள்ளார்.
அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், திரிபுரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநில பெண்களை ஏமாற்றியுள்ளார்.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒடிசாவில் தலைமறைவாக இருந்த தபேஷை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.