சத்தீஸ்கரில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறிய மிக்ஜாம் புயலால், தெற்கு ஒடிசாவின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்புயல் காரணமாக ஒடிசாவில் நேற்று முன்தினம் தொடங்கிய இடைவிடாத கனமழை இன்று காலை வரை நீடித்தது.
இதனால் நேற்று இரவு கோராபுட்டின் நாராயண்பட்னா தொகுதிக்கு உட்பட்ட பாரிபுட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவு காரணமாக கோராபுட்டில் உள்ள கோடியா என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்தது. மேலும். பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மழைக்கு முன் பயிர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் பல விவசாயிகள் அறுவடையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காததால் மாபெரும் நஷ்டத்தை அடைந்துள்ளனா்.
இந்த நிலையில் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதற்கிடையில்,ஒடிசாவில் ஏற்பட்ட புயல் குறித்த சேதத்தை மதிப்பீடு செய்ய சிறப்பு நிவாரண ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் இணைந்து கணக்கெடுப்பு நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
வருகிற டிச.12-ம் தேதிக்குள் அதிகாரிகள் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் முந்தைய வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்ட பகுதிகளைக் கணக்கெடுப்பில் இருந்து விலக்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.