இந்தியா
அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
தெலங்கானா மாநில கல்வித்துறை அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநில கல்வி அமைச்சராக இருப்பவர் சபிதா இந்திரா ரெட்டி. இவரது பாதுகாப்பு அதிகாரியாக முகமது பசல் அலி பணிபுரிந்து வருகிறார். இன்று காலை 7 மணியளவில் ஹைதராபாத்தில் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு வெளியே அவர் தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து அங்குவந்த போலீஸார், அவரது உடலை மீட்டு உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இன்று வழக்கம் போல் காலை 6 மணிக்கு அவர் பணிக்கு வந்ததும் அதன் பிறகு தனது மகளுடன் அலைபேசியில் பேசியதும் தெரிய வந்துள்ளது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் நிதிப் பிரச்சினை காரணமாக பசல் அலி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.ஆனால் ஒரு அமைச்சரின் பாதுகாவலா் இப்படி செய்துள்ளது அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.