சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன், சந்திரகுமார் போஸ் பாஜகவிலிருந்து விலகினார்.
2016 முதல் 2020 வரை மேற்கு வங்க மாநில பாஜக துணைத் தலைவராக செயல்பட்ட நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில் அவர் தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நான் பாஜகவில் சேரும்போது தேசியத் தலைவர்களான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவரது அண்ணன் சரத் சந்திரபோஸ் ஆகியோரின் சிந்தனைகளைப் பற்றி பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனல், நிஜத்தில் அதுபோல ஏதும் நடக்கவில்லை. ஆசாத் ஹிந்து மோர்சா என்ற பிரிவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன் முக்கிய நோக்கம் நேதாஜியின் சிந்தனைகளான ஜாதி, மதம், நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைப்பதே ஆகும். ஒன்றுபட்ட இந்தியாவுக்கு அது அவசியமும்கூட. ஆனால், அதற்கான எனது தீவிர முயற்சிகளுக்கு பாஜகவில் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. மேற்குவங்கத்திலும், மத்தியிலும் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.