தமிழகம்
டி.ஐ.ஜி தற்கொலை விவகாரத்தில் 6 பேருக்கு போலீசார் சம்மன்!
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீஸ் துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தங்களது கருத்துகளையும் பதிவு செய்தனர்.
இந்நிலையில், போலீசார் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 6 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அந்த சம்மன் அடிப்படையில் கோவை ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். அப்படி அவர்கள் ஆஜராகும்பட்சத்தில் அவர்களிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இது மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் கரிகாலன் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது.