Connect with us

Raj News Tamil

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவையில் ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று… ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு… மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறையடிக்க வேண்டும்.

இந்த இரண்டு திட்டங்களும் மக்களாட்சியை குலைக்கும் செயல் என்பதால், இவற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எத்தகைய ஆபத்து நிறைந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து, ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால் அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா?.

சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவார்களா. இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா?. நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா?. நாடாளுமன்ற தேர்தலையே கூட, ஒரே நாளில் இந்தியா முழுவதும் நடத்த தயாராக இல்லாத சூழல் தான் இப்போது இருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 30 மாநில சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா?.

நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. எனவே இவற்றுக்கும் நாடாளுமன்றம், சட்டமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்டவிரோதம் ஆகும். உள்ளாட்சி தேர்தல் முழுக்கமுழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அவற்றுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்போவதாக சொல்வது மாநில உரிமைகளை பறிப்பதாகும். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்பட உள்ள நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் செயலுக்கு யாரும் பலியாகிவிட கூடாது. எனவே நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும். எனத் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top