தமிழகம்
“தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு” – நியாய விலைக் கடை ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!
நியாய விலைக் கடை ஊழியர்கள் சங்கத்தின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக, அச்சங்கத்தின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளர்கள், கடந்த ஆண்டு போராட்டம் நடத்தியிருந்தனர். அப்போது, பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு, அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்திருந்தது.
ஆனால், தற்போது வரை, அந்த 21 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக, ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு, சங்க நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், அச்சங்கத்தின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தங்களது தொடர் வேலை நிறுத்தப் போராட்டம், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், போராட்டம் குறித்து முடிவு செய்து, ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பாலசுப்பிரமணியன், பணியாளர்களுக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வரும் நாகப்பட்டினம் மாவட்ட இணை பதிவாளர் மீதும், கடலூர் மாவட்டப் துணைப் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
You must be logged in to post a comment Login