தமிழகம்
ராஜ் நியூஸ் செய்தி எதிரொலி : இடையூறாக வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியின் சுற்று சுவருக்கு வெளியே 2 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் மாணவியர் நல விடுதி கட்டப்பட்டுள்ளது. இதில் 61 மாணவிகள் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பாசன கால்வாய் பாதை வழியாக மாணவிகள் செல்லும் போது, அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்கள் மாணவிகளை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனாக அப்பாதை வழியாக மாணவிகள் கல்லூரிக்கு செல்ல அச்சப்பட்டு, விடுதியின் பின்புறம் உள்ள கல்லூரியின் சுவர் மீது ஏறி குதித்து கல்லூரிக்கு செல்லும் அவல நிலை குறித்து நியூஸ் தமிழ் செய்தி ஒளிபரப்பாகியது.
இதனையடுத்து, ராஜ் நியூஸ் செய்தியின் எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி, மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை உள்ளிட்ட அதிகாரிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் நல விடுதிக்கு சென்று மாணவிகளிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கல்லூரிக்கு பாதுகாப்பான முறையில் மாணவிகள் செல்லும் வகையில், விடுதியில் இருந்து ஒருவார காலத்திற்குள் பாதை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்லியன் ரெபோனி தலைமையில் மேலூர் காவல்துறையினர் மாணவியர் விடுதியில் பகுதியில் ரோந்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இச்செய்தியின் எதிரொலியாக கல்லூரி நுழைவு வாயில் மாணவர்களுக்கு இடையூறாக சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் இரவோடு இரவாக அகற்றினர்.