Connect with us

Raj News Tamil

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகம்

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொது செயலாளராக அவரது தோழி வி.கே. சசிகலா, துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் பிறகு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளராக இருந்தும்
நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சசிகலா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது சசிகலா தரப்பில் மூத்த வழக்‍கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை அந்த கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டதாக தெரிவித்தார். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், சசிகலா தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக தான் உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என தெரிவித்தார்.

அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் கட்சியின் உச்ச பட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின் படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவே சசிகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அவரை நீக்கிய தீர்மானம் செல்லும் என உத்தரவிட்டுள்ளனர்.

More in தமிழகம்

To Top