மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக கலவரம் வெடித்ததில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பிஷ்னுபூர் மாவட்டத்திலுள்ள க்வாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம் நடந்துள்ளது. கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
க்வாதாவில் மைதேயி சமூகத்தினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால், இந்த கலவரம் ஏற்பட்டதாக மணிப்பூரிலுள்ள ஆயுதப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கலவரக்காரர்கள் கூகி சமூகத்தைச் சேர்ந்த வீடுகள் தீயிட்டு எரித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின.
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமையன்று ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று வெடித்தக் கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதவிர கங்வாய், போக்சாவ் பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களை அடக்கப் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மைத்தேயி சமூகப் பெண்கள் சோதனைச் சாவடியைத் தாண்டிய நுழைய முயன்றதால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுக்ளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.