சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றுவிட்டனர்.
அதன்பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் விமானத்துக்குள் சென்று ஒவ்வொரு இருக்கையாக சோதனை செய்தனர்.
அப்போது விமானத்தில் பயணிகள் அமரும் இருக்கையின் அடியில் கருப்பு நிற டேப் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பார்சல் கேட்பாரற்று இருந்தது.
அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு தங்க கட்டி இருந்தது.
ரூ.62 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த தங்க கட்டியை வங்காளதேசத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது யார்?, அந்த விமானம் பன்னாட்டு விமானமாக வந்து, சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததை அறிந்து அதனை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து, உள்நாட்டு பயணிபோல் வந்து எடுத்துச்செல்ல திட்டமிட்டனரா? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.