அரசியல்
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பிய சைதாப்பேட்டை நீதிமன்றம்
திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியல்களை அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக திமுக பொருளாளர் டி ஆர் பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
10 ஆயிரத்து 841 கோடி ரூபாய் மதிப்பிலான 21 நிறுவனங்கள் தனக்கு சொந்தமானவை என அண்ணாமலை கூறியது தவறானது என்றும் அவதூறானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login