தமிழகம்
5 நாட்கள் கடுங்காவலில் சிக்கிய செந்தில் பாலாஜி !எதிர்ப்பு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்ரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார்.
செந்தில் பாலாஜி உடல் நிலை தேறியபிறகு ,அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று கூறினர்.இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் மனுக்கள் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது.
இருத்தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அதில், செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும், அது சட்டவிரோதம் இல்லை என்றும் கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி, மேகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.