இந்தியா
கேரளாவில் அதிர்ச்சி.! இரண்டு அமைச்சா்கள் ராஜினாமா !
இடதுசாரி கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் வகையில் இரண்டு அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது , இவர்களது ராஜினாமா இடைக்கால அமைச்சரவை மாற்றத்துக்கு வழி வகுத்ததுள்ளது.
அதன்படி , கேரள அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவராகோவில் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்குப் பதிலாக கே.பி.கணேஷ் குமார், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக டிசம்பர் 29ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். இடதுசாரி கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூட்டணி கட்சி எம்எல்ஏக்களான கே.பி.கணேஷ் குமார், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அமைச்சர்களாக இருப்பார்கள்.
கே.பி.கணேஷ் குமார், போக்குவரத்து இலாகாவை நிர்வகிக்கவுள்ளதாகவும்,அதே நேரத்தில் மூத்த காங்கிரஸ்(எஸ்) தலைவரான ராமச்சந்திரன் துறைமுகங்கள், அருங்காட்சியகம், தொல்லியல் மற்றும் ஆவணக் காப்பகத் துறை ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.