தமிழகம்
தரமில்லாத கட்டுமான பணிகள்: உங்கள் வீட்டை இப்படி கட்டுவீர்களா? மாவட்ட ஆட்சியர் சரமாரி கேள்வி!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் களஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பாடாலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.63 லட்சம் மதிப்பீட்டில் 42 கடைகள் உள்ளடக்கிய புதிய கிராம சந்தை கட்டிடம் கட்டும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் செங்கல் சுவரின் மீது பூசப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சை கை விரல்களால் தொட்டுப் பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
செங்கல் சூறின் மீது பூசப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சி கலெக்டரின் கை பட்டதும் மாவு போல் பெயர்ந்து கொட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் உடனடியாக அங்கு அழைத்து உங்கள் வீட்டு கட்டுமான பணிகள் என்றால் இவ்வாறு தரம் இல்லாமல் மேற்கொள்வீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும் மக்களின் வரிப்பணத்தில் அரசு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற பயனுள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினால் அதனை நடைமுறைப்படுத்தும் உங்களைப் போன்ற ஒப்பந்ததாரர்கள் கட்டுமான பணிக்கென ஒதுக்கும் நிதியை முறையாக பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இது போன்று கொஞ்சம் கூட தரம் இல்லாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் எச்சரித்தார்.
தரம் இல்லாத கட்டுமானத்தை உடனடியாக சீர் செய்ய அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர் அப்படி சீர் செய்ய தவறும் பட்சத்தில் இந்த கட்டுமான பணிக்கான பில் தொகையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.