சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இன்று காலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தார்.
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் தங்கையா என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. இதுநாக்பூர் லைசன்ஸ் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். (ஜூலை 9) இன்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மருந்து கலவை அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அறை வெடித்து சிதறியது. அறையில் வேலை பார்த்த மாரியப்பன், முத்துவேல் இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சரோஜா , சங்கரவேல் இரண்டு தொழிலாளர்கள் காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்ட சிவகாசி தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை, போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து எம்.புதுபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.