இந்தியா
பார்ப்பதற்கு மட்டுமல்ல.. மதிப்பெண்களும் ஒரே மாதிரி.. ஆச்சரியப்படுத்திய இரட்டையர்கள்..
இரட்டையர் குழந்தைகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அவர்கள் வாங்கிய மதிப்பெண்களும், ஒரே மாதிரியாக அமைந்த சம்பவங்களை எங்கேயேவாது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால், அப்படியான சம்பவம் ஒன்று, உண்மையிலேயே நடந்துள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்..
ஓடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பாலுகான் என்ற பகுதியில், சரஸ்வதி சிஷூ மந்தீர் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கரினா பிஸ்வால், கரிஷ்மா பிஸ்வால் ஆகிய இரண்டு மாணவிகள், 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இரட்டையர் குழந்தைகளான இவர்கள் இரண்டு பேரும், சமீபத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வையும் எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான முடிவுகள், நேற்று வெளியானது. இதில், இரண்டு பேரும் 600-க்கு 552 மதிப்பெண்களை பெற்று, பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய மாணவி கரீனா, “எங்களது பெயருக்கு பின்னால் இருந்த மதிப்பெண்களை முதலில் பார்க்கும்போது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. மூன்று, நான்கு முறை, நாங்கள் திரும்பி திரும்பி பரிசோதித்து பார்த்தோம்” என்று கூறினார். மேலும், “பொதுத் தேர்வில் நாங்கள் இரண்டு பேரும் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பதால், நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்றும் தெரிவித்தார்.
“அவர்கள் இரண்டு பேரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், அவர்களை கண்டுபிடிப்பது, ஆசிரியர்களுக்கு கடினமாக இருக்கும்.
எனவே அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவியா, அவர்கள் இரண்டு பேரும், வெவ்வேறு நிறத்திலான மூக்கு கண்ணாடிகளை அணிவார்கள்” என்று, இரட்டையர்கள் படித்து வரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரஹல்லாத் தாஷ் கூறினார்.
மேலும், “நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கு, மற்றவர்களோடு சேர்த்து, இந்த இரண்டு பேருக்கும் நாங்கள் கூடுதல் பயிற்சியை கொடுத்தோம்” என்றும் அவர் கூறினார்.
இரட்டையர்கள் குறித்து பேசிய அவர்களது தாய் ஜூனு சாஷூ, “ இவர்கள் இரண்டு பேரும் பிரிக்கவே முடியாதவர்கள். நான் ஒருத்தியை திட்டும்போது, இன்னொருத்தி வந்து, அவளுக்காக என்னிடம் வாதாடுவாள்” என்று கூறினார்.
என்னதான் இவர்கள் இரண்டு பேரும், உருவத்திலும், மதிப்பெண்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இவர்களது கனவு என்பது வித்தியாசமானது தான். இதில், கரிஷ்மா பேராசிரியராக வேண்டும் என்ற கனவோடும், கரினா வங்கி சார்ந்த பணியில் சேர வேண்டும் என்ற கனவோடும் இருந்து வருகின்றனர்.