ரயிலில் ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பலர் பொதுவாக, பலவித நெருக்கடிகளில் சிக்குவதுண்டு.
இதில் குறிப்பாக , பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றுக்காக அல்லாடும் நிலை உள்ளது. ரயில் நிலையங்களில் வாங்கும் உணவின் விலை சற்று அதிகம் என்பதால், இதனை கருத்தில் கொண்டு, வடக்கு மண்டலத்தில் உள்ள 59 ரயில் நிலையங்களில் மலிவு விலைக்கு உணவு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், முதற்கட்டமாக 14 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அதன்படி, முன்பதிவில்லாத பொது பெட்டிகள் நிற்கும் நடைமேடைகள் அருகே, இதற்காக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
7 பூரிகள் மற்றும் உருளைக்கிழங்கு, ஊறுகாய் அடங்கிய மலிவு விலை உணவு 20 ரூபாய்க்கும், அரிசி சாதம், கிச்சடி, மசாலா தோசை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று காம்போ உணவு வகையாக 50 ரூபாய்க்கும் விநியோகம் செய்யப்படுவதாக வடக்கு ரயில்வே பி.ஆர்.ஓ.ராஜேஷ் காரே தெரிவித்துள்ளார்.
ரயில் பயணத்தில் உணவிற்கு அல்லல்படும் , பலரின் பசியினை போக்கும் நல்லதொரு திருப்புமுனை முயற்சியாக இது ,இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.