இந்தியா
விளம்பர சர்ச்சை : பாபா ராம்தேவ்வின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வழங்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, “விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொய்யான மற்றும் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து விளம்பரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் மீண்டும் நீதிமன்றம் தலையிட்டு விளம்பரங்களை நிறுத்த உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக பாபா ராம்தேவ் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது. ஆனால் அவர் பதிலளிக்க வில்லை.
இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்” என காட்டமாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ராம்தேவ், “எதிர்காலத்தில் மிகவும் விழிப்புடன் இருப்பேன்” என்று உறுதியளித்திருந்தார். அதில் “விளம்பரச் சிக்கல் தொடர்பான வழக்கில் நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன். இந்த தவறுக்கு நான் உண்மையிலேயே வருந்துகிறேன், மேலும் இது மீண்டும் நடக்காது என்று மாண்புமிகு நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறேன் ”என்று ராம்தேவ் பிரமாணப் பத்திரத்தில் கூறி இருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.