ஓசூர் அருகே டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்னப்பள்ளி அருகே கூஸ்தானப்பள்ளியில் டாடா தொழிற்சாலை நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இங்கு செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சாலையில் ஆலோ பிளான்ட்கெமிக்கல் பகுதியில் திடீரென இன்று காலையில் தீ பற்றியது. அந்தப் பகுதியில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு முதல் கட்டமாக தீயை அனைத்து முற்பட்டனர்.

ஆனால் கெமிக்கல் பகுதி என்பதால் தீ திடீரென பரவியது. தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உடனே, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் நான்கு வாகனங்களில் இருந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை போராடி கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீயானது கெமிக்கல் பிளான்ட்டில் ஏற்பட்டுள்ளதால், கரும்புகையுடன் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தேன்கனிக்கோட்டை ராயக்கோட்டை ஓசூர் தீயணைப்பு துறையினர் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்

தொழிலாளர்களை போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மின்சாரத் துறையினர் துரிதமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை துண்டித்து உள்ளனர்.

காலையில் இந்த சம்பவம் நடந்ததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News