தமிழகம்
பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்: ஆத்திரத்தில் கீழே குதித்த இளைஞர்!
பாகூர் அடுத்துள்ள கரையாம்புத்தூர் அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் 25. இவர் காட்டுகுப்பம் அருகே உள்ள வார்க்கால் ஓடை தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக வழக்கம்போல் தனியார் பேருந்தில் ஏறி வார்க்கால் ஓடைக்கு பேருந்தில் வந்துள்ளார்.
அப்போது பேருந்து நிறுத்தம் வருகிறது பேருந்தை நிறுத்துங்கள் என்று சொல்லி உள்ளார். ஆனால், பேருந்து நடத்துனர் பேருந்தை நிறுத்தவில்லை என்று தெரிகிறது.
தொடர்ந்து, பேருந்து நிறுத்த சொல்லி கூச்சல் போட்டுள்ளார். இதனால், இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பேருந்தை நிறுத்தவில்லை என்றால் நான் குதித்து விடுவேன் என்று அவர் அவேசத்துடன் கூறி உள்ளார். எங்களால் பேருந்தை நிறுத்த முடியாது. நீ வேண்டுமென்றால் குதித்துக் கொள் என்று ஓட்டுனர் கரராக கூறிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன் பேருந்தில் இருந்து கீழே குதித்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவலின் பெயரில் கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இப்பகுதியில் தனியார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் மாலை, காலை வேலைகளில் ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக பேருந்தில் சென்று வருவது வழக்கம். இதே வேளையில், தனியாக வரும் ஊழியர்களை அங்கு நிறுத்தாமல் காட்டுக்குப்பத்தில் நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் ஊழியர்களுக்கும் பேருந்து ஓட்டுனர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அது போன்று தான் இன்றும் அதே பிரச்சனை ஏற்பட்டு இளைஞர் கீழே குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.