திருச்செந்தூரில் இருந்து திருச்சி நோக்கி நேற்று மாலை அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 62 பயணிகள் பயணம் செய்தனர். முகேஷ் ராஜா (வயது 54) என்பவர் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துள்ளார். இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடத்துநர் திருப்பதி சாமர்த்தியமாகச் செயல்பட்டு உடனடியாக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுநர் முகேஷ் ராஜாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முகேஷ் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.