தமிழகம்
மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்: விரட்டி சென்று பிடித்த பெண் உதவி ஆய்வாளர்!
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து வாணவரெட்டி கிராமத்திற்கு தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த தனியார் மினி பேருந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து வாணவரெட்டி கிராமத்திற்கு அதிவேகமாக பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வதை பார்த்த கள்ளக்குறிச்சி போக்குவரத்து பெண் உதவி ஆய்வாளர் கீர்த்தனா மற்றும் போக்குவரத்து போலீசார் பேருந்தை துரத்திச் சென்று கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
மேலும் பேருந்து ஓட்டுனரை சோதனை செய்ததில் அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து மது போதையில் இருந்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முத்து என்பவருக்கு போலீசார் அபராதம் விதித்த நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் மூலமாக தங்களது கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சியில் மது போதையில் பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுனரை பெண் உதவி ஆய்வாளர் துணிச்சலாக விரட்டி சென்று தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.