தமிழகம்
மிச்சாங் புயலின் எதிரொலி ! சேதமடைந்த 7 குடிசை வீடுகள் !
மிச்சாங் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 116 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய தாலுகாக்களில் உள்ள 79 ஏரிகளில் 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இதனால் அந்த ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளின் நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திருத்தணி நகராட்சியில் ஜோதி நகர் பகுதியில் நான்கு குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாக அப்போது வீட்டில் யாரும் இல்லாததால்
யாருக்கும் எந்த வித உயிா் சேதமும் ஏற்படவில்லை .
இதே போல் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 7 குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். மழை தொடர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்களை மீட்டு 23 சிறப்பு முகாம்களில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட சுமார் 700 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களான திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.