தமிழகம்
ஆளுநா் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி!விரட்டி பிடித்த போலீஸாா்!
சென்னை கிண்டி பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை உள்ளது. இங்கு போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று போலீஸார் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.
இதையடுத்து, போலீஸார் இருசக்கர வாகனத்தை விரட்டிச் சென்று அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவரது பெயர் கருக்கா வினோத் என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலை ஆனார் என்பதும் தெரியவந்தது.
வினோத்திடம் போலீஸார் மேற்கொண்ட தொடர் தீவிரவிசாரணையில் சிறையில் இருந்து விடுதலையாக ஆளுநர் தாமதம் செய்ததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வினோத் மீது ஐபிசி 124 வது பிரிவின்படி, தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய ராஜ்பவன் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்