தோஷம் கழிப்பதற்காக பதப்படுத்தப்பட்ட நரி தலையை வீட்டின் முன்பு கட்டிவர் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நாச்சியார்பேட்டையில், சோழத்தரம் செல்லும் மெயின் ரோட்டில், ஒரு வீட்டின் மாடி முகப்பில் பதப்படுத்தப்பட்ட நரியின் தலை கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிதம்பரம் வனத்துறை வனவர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர்
சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் முன்பு கட்டி தொங்க விடப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட நரியின் தலையை கைப்பற்றினர்.
பின்னர் நரித் தலையை விலை கொடுத்து வாங்கிய வீட்டின் உரிமையாளர் ராமலிங்கம் ( 66), என்பவரும்
அதை விற்பனை செய்த ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த ராஜி ( 70) என்பவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து, வனவர் பன்னீர்செல்வம் கூறுகையில், வனத்துறை ஷெட்யூல் 1 பட்டியலுக்கு உட்பட்ட உடும்பு, நரி, மான், மயில், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் முதல் இரண்டரை லட்சம் வரை அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.