அரசியல்
சதம் அடித்த தக்காளியின் விலை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஒரு கிலோ தக்காளி விலை ரூபாய் 122 என்ற உச்சத்தை தொட்டுயுள்ளது. ஒரிருநாளில் ஏற்பட்ட இந்த திடீர் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தக்காளி கிலா 110 ரூபாய்:
கடந்த வாரம் வரையில் கிலோ ரூ. 25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, இன்று (புதன் கிழமை) ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ரூ.80 க்கு விற்பனையாகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்த காரணத்தாலேயே விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு, ஒரு நாளைக்கு 60 லாரிகள் தக்காளி வந்த நிலையில், இப்போது 42 லாரிகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஒரு கிலோ தக்காளி வாங்கி வந்த இல்லத்தரசிகள், இந்த விலை உயர்வால் அதிர்ச்சியடைந்து, கால் கிலோ அளவுக்கே வாங்கிச் செல்கின்றனர். சில இல்லத்தரசிகள் தக்காளி வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.
தேசிய அளவில் தக்காளியின் விலை:
நுகர்வோர் விவகாரத் துறை தரவுகளின்படி, பெருநகரங்களான மும்பையில் ரூ.42, கொல்கத்தாவில் ரூ.75, புதுடெல்லி ரூ.60, பெங்களுரில் ரூ.52, புவனேசுவரம், ராய்பூரில் ரூ.100 ஆக உள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தின் கோரக்பூர், கர்நாடகத்தின் பெல்லாரியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 122 விற்பனையாகிறது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது:-
மக்கள் அதிகம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், உருளைக் கிழக்கு ஆகியவற்றின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பது அரசின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தவறான கொள்கைகளாலும், அலட்சியப் போக்காலும் இப்போது தக்காளி விலை கிலோ 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. என்று கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login