ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது.
ஆறு நாட்களும் தினமும் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. இன்று சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, இன்று அதிகாலை 1-00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து யாகசாலை மண்டபத்தில் இன்று காலை 6-00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது.
பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி கந்த சஷ்டி மண்டபம் வந்தடைந்தார். பின்னர் மதியம் 2 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதனையடுத்து மாலை 4-00 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி ஜெயந்திநாதர் யானை முகம் கொண்ட தாரகாசூரனையும், சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.
இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் கலந்து கொண்டனர். நாளை இரவு 11 மணிக்குமேல் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் திருக்கோயில் வளாக மேலக்கோபுரம் முன்பு உள்ள மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக காவல்துறை சார்பில் 5 காவல் கூடுதல் கண்காணிப்பாளர், 103 காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட எல்கைகளில் 13 இடங்களில் சோதனைசாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வந்தனர்.
200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. 3 தற்காலிக பேருந்து நிலையம், 16 இடங்களில் 12500 வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது.