தமிழகம்
திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை 4 ஏ.டி.எம் மையங்களில் ரூபாய் 73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தலைமையில் நான்கு எஸ்.பி உள்ளிட்ட ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் கடந்த ஐந்து நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கொள்ளை கும்பல் தலைவன் முகமதுஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் ஹரியானாவில் தனி படை போலீசார் கைது செய்தனர். பிறகு டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் விசாரணைக்காக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி தெய்வீகன் முன்னிலையில் முகமதுஆரிஃப் மற்றும் ஆசாத் இருவரையும் ஆஜர் படுத்தப்பட்டனர்.
You must be logged in to post a comment Login