இந்தியா
UPSC தேர்வு எழுதுறீங்களா? – தமிழக அரசின் இந்த அறிவிப்பை தெரிஞ்சிக்கோங்க!
IAS, IPS, IFS உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு, பல்வேறு மாணவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்கான பயிற்சி வகுப்புகள் அதிக கட்டணங்களில் நடத்தப்பட்டு வருவதால், ஏழை எளிய மாணவர்களால், சேர முடியாமல் உள்ளது.
இதனை அறிந்த தமிழக அரசு, மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அந்த பயிற்சி வகுப்பில் சேர எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், அதற்கான தகுதிகள் என்ன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளது.
“கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு, 28.05.2023 அன்று நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சியினை அளிக்க உள்ளது.
சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது.
2023-ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் “www.civilservicecoaching.com வாயிலாக 07.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது. மேலும் பயிற்சியில் சேர விரும்பவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள் 13.11.20022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் நுழைவத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்படும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். அதேபோல நடப்பாண்டுன் டிசம்பர் மாதத்தின் 2வது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login